நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் பெரிய வருமானம் எதுவும் வரல ஆனா ஏதோ பொழைப்பு ஓடுது என்று ரொம்பவே சலித்துக் கொள்வான். நான் அப்போதைக்கு அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் விடுமுறை முடிந்து வேலைக்கு போன போது என்னோட மனேஜரிடம் பேசினேன்.
அடுத்த முறை ஊருக்கு வந்த போது ஜனா அதே போல் தொழில் சரி இல்லை, வருமானம் போதவில்லை என்று அதே பஞ்சப் பாட்டை பாடிய போது அவனிடம் டேய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் கொண்டு வந்திருக்கேன். என்னோட கம்பெனியில் உனக்கு வேலை ரெடியா இருக்கு. மானேஜர் என்னை வரும் போதே உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாரு டா. நீயும் நானும் ஒரே ரூம்ல தங்கிக்கலாம். ஊருக்கு சேர்ந்தே லீவு போட்டுட்டு வந்து போலாம். கிளம்பு டா என்றேன்.
என்னை முறைத்து பார்த்த ஜனா, டேய் வீட்டு சாப்பாட்ட விட்டுட்டு வெளியூர் வேலைக்கு வரச் சொல்றியா. என்னால முடியாதுப்பா. நான் எலக்டிரிக்கல் படிச்சதே எங்க அப்பா கடையை பார்த்துக்க தான். எனக்கு இந்த வருமானம் பத்தலைனாலும் சொந்த ஊர்ல சொந்த பந்தங்களோட இருக்கிற நிம்மதி வருமா டா என்று கேட்டு என்னை அதிர்ச்சி அடைய வைத்தான்.
“என்னடா இப்படி சொல்றே. நீ தானே வருமான பத்தலைனு வரும் போதுலாம் புலம்பி கிட்டே இருந்தே”
“அது உண்மை தான்டா. இப்போ உனக்கே கூட அந்த ஆதங்கம் இருக்கும். அய்யோ இன்னும் கொஞ்சம் சம்பளம் கூட இருந்தா நல்லா இருக்குமேனு. அதுக்கா நான் உன்கிட்டே எப்போவாது எனக்கும் உன் கம்பெனியில வேலை பார்த்து கொடுடானு கேட்டு இருக்கேனா. நீயா கற்பனை பண்ணிகிட்டேனா எப்படி டா. நீ என் கிட்டே கம்பெனி வேலைக்கு ரெடி பண்ணவானு முன்னாடியே கேட்டு இருந்தா நான் வேண்டாம்னு தான் சொல்லி இருப்பேன்” என்றான்.
அதற்கு பிறகு நான் ஊருக்கு வரும் போது போகும் போது எல்லாம் ஜனாவை பார்த்து பேசினாலும் அவனிடம் வேலையை பற்றி பேசுவது இல்லை. ஆனால் எனக்கு மட்டும் அவன் ஊரை விட்டு வெளியூர் வேலைக்கு போக விரும்பாத காரணத்தை புரிஞ்சுக்க முடியவே இல்லை.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது அவங்க அப்பா யூஸ் பண்ணிய அதே பழைய பைக்கில் சர்வீஸ் வேலைகளுக்கு போய் கொண்டு இருந்தான். டிரஸ் மட்டும் டிப் டாப் ஆக இருக்கும். நான் ஒரு நாள் அவன் அப்பாவிடம் ஜனாவை வெளியூருக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டீங்களா என்று நான் அவனுக்கு ஏற்பாடு செய்த வேலையை பற்றி கூறி அவன் வர மறுத்து விட்டதை சொன்ன போது அவரோ,
“அதெல்லாம் அவன் இஷ்டம்ப்பா. அவன் மூணு வேலை சாப்பாட்டுக்கு சம்பாதிச்சா போதும். இன்னைக்கு தேதி வரைக்கும் யாருக்கும் எந்த கடனும் கிடையாது. எனக்கு வரவேண்டிய பணம் தான் பாக்கி இருக்கு. அது கூட ஊர்ல எல்லாம் தெரிஞ்ச முகம்னால முகம் சுழிச்சு கேட்க முடியல. ஆனா பழைய காசை தந்துட்டு தான் புது வேலை கொடுப்பாங்க. அதனால பெருசா கவலை இல்ல” என்றார்.
அதற்கு பிறகு தான் ஜனா சொந்த ஊரில் சொந்த தொழிலில் இருக்கும் சவுகரியத்தை விட்டு வெளியூர் வந்து கஷ்டப் பட விரும்ப வில்லை என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பார்வை இலக்கு இருப்பதை புரிந்து கொண்டேன். சிலருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு, ரிஸ்க் எடுத்து பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வர ஆசை, சிலருக்கோ இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டி விட ஆசை என்பதை விளங்கிக் கொண்டேன்.